நூல்கள்›அகநானூறு›பாடல் 1947

பாடல் 1947

ஊட்டியார்

'அன்னாய்! வாழி, வேண்டு அன்னை! நம் படப்பைத்

தண் அயத்து அமன்ற கூதளம் குழைய,

இன் இசை அருவிப் பாடும் என்னதூஉம்

கேட்டியோ! வாழி, வேண்டு அன்னை! நம் படப்பை

ஊட்டியன்ன ஒண் தளிர்ச் செயலை . . . .

ஓங்கு சினைத் தொடுத்த ஊசல், பாம்பு என,

முழு முதல் துமிய உரும் எறிந்தன்றே;

பின்னும் கேட்டியோ?' எனவும் அஃது அறியாள்,

அன்னையும் கனை துயில் மடிந்தனள்; அதன்தலை

மன் உயிர் மடிந்தன்றால் பொழுதே காதலர் . . . .

வருவர்ஆயின், 'பருவம் இது' எனச்

சுடர்ந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்த நம்வயின்

படர்ந்த உள்ளம் பழுது அன்றாக,

வந்தனர் வாழி, தோழி! அந்தரத்து

இமிழ் பெயல் தலைஇய இனப் பல கொண்மூத் . . . .

தவிர்வு இல் வெள்ளம் தலைத்தலை சிறப்ப,

கன்று கால் ஒய்யும் கடுஞ் சுழி நீத்தம்

புன் தலை மடப் பிடிப் பூசல் பல உடன்

வெண் கோட்டு யானை விளி படத் துழவும்

அகல் வாய்ப் பாந்தட் படாஅர்ப் . . . .

பகலும் அஞ்சும் பனிக் கடுஞ் சுரனே

களிற்றியானை நிரை

← பாடல் 1946பாடல் 1948 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்