நூல்கள்›அகநானூறு›பாடல் 1927

பாடல் 1927

தங்கால் முடக் கொற்றனார்

'அன்னாய்! வாழி! வேண்டு, அன்னை! நின் மகள்,

'பாலும் உண்ணாள், பழங்கண் கொண்டு,

நனி பசந்தனள்' என வினவுதி; அதன் திறம்

யானும் தெற்றென உணரேன்; மேல் நாள்,

மலி பூஞ் சாரல், என் தோழி மாரோடு . . . .

ஒலி சினை வேங்கை கொய்குவம் சென்றுழி,

'புலி புலி!' என்னும் பூசல் தோன்ற

ஒண் செங்கழுநீர்க் கண் போல் ஆய் இதழ்

ஊசி போகிய சூழ் செய் மாலையன்,

பக்கம் சேர்த்திய செச்சைக் கண்ணியன் . . . .

குயம் மண்டு ஆகம் செஞ் சாந்து நீவி,

வரிபுனை வில்லன், ஒருகணை தெரிந்து கொண்டு,

'யாதோ, மற்று அம் மா திறம் படர்?' என

வினவி நிற்றந்தோனே. அவற் கண்டு,

எம்முள் எம்முள் மெய்ம் மறைபு ஒடுங்கி . . . .

நாணி நின்றனெமாக, பேணி,

'ஐவகை வகுத்த கூந்தல் ஆய் நுதல்

மை ஈர் ஓதி மடவீர்! நும் வாய்ப்

பொய்யும் உளவோ?' என்றனன் பையெனப்

பரி முடுகு தவிர்த்த தேரன், எதிர்மறுத்து . . . .

நின் மகள் உண்கண் பன் மாண் நோக்கிச்

சென்றோன் மன்ற, அக் குன்று கிழவோனே!

பகல் மாய் அந்திப் படுசுடர் அமையத்து,

அவன் மறை தேஎம் நோக்கி, 'மற்று இவன்

மகனே தோழி!' என்றனள் . . . .

அதன் அளவு உண்டு கோள், மதிவல் லோர்க்கே.

களிற்றியானை நிரை

← பாடல் 1926பாடல் 1928 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்