பாடல் 1896
கயமனார்
வளம் கெழு திரு நகர்ப் பந்து சிறிது எறியினும்,
இளந் துணை ஆயமொடு கழங்கு உடன் ஆடினும்,
'உயங்கின்று, அன்னை! என் மெய்' என்று அசைஇ,
மயங்கு வியர் பொறித்த நுதலள், தண்ணென,
முயங்கினள் வதியும் மன்னே! இனியே . . . .
தொடி மாண் சுற்றமும் எம்மும் உள்ளாள்,
நெடு மொழித் தந்தை அருங் கடி நீவி,
நொதும லாளன் நெஞ்சு அறப் பெற்ற என்
சிறு முதுக் குறைவி சிலம்பு ஆர் சீறடி
வல்லகொல், செல்லத் தாமே கல்லென . . . .
ஊர் எழுந்தன்ன உரு கெழு செலவின்,
நீர் இல் அத்தத்து ஆர் இடை, மடுத்த,
கொடுங் கோல் உமணர், பகடு தெழி தெள் விளி
நெடும் பெருங் குன்றத்து இமிழ் கொள இயம்பும்,
கடுங் கதிர் திருகிய, வேய் பயில், பிறங்கல் . . . .
பெருங் களிறு உரிஞ்சிய மண்அரை யாஅத்து
அருஞ் சுரக் கவலைய அதர் படு மருங்கின்,
நீள் அரை இலவத்து ஊழ் கழி பல் மலர்,
விழவுத் தலைக்கொண்ட பழ விறல் மூதூர்,
நெய் உமிழ் சுடரின் கால் பொரச் சில்கி . . . .
வைகுறு மீனின் தோன்றும்
மை படு மா மலை விலங்கிய சுரனே?
களிற்றியானை நிரை