பாடல் 1877
தொல் இயல் ஞாலத்துத் தொழில் ஆற்றி, ஞாயிறு,
வல்லவன் கூறிய வினை தலை வைத்தான்போல்,
கல் அடைபு, கதிர் ஊன்றி, கண் பயம் கெடப் பெயர;
அல்லது கெடுப்பவன் அருள் கொண்ட முகம் போல,
மல்லல் நீர்த் திரை ஊர்பு, மால் இருள் மதி சீப்ப; . . . .
இல்லவர் ஒழுக்கம் போல், இருங் கழி மலர் கூம்ப;
செல்லும் என் உயிர்ப் புறத்து இறுத்தந்த மருள் மாலை!
மாலை நீ,
இன்புற்றார்க்கு இறைச்சியாய் இயைவதோ செய்தாய்மன்;
அன்புற்றார் அழ, நீத்த அல்லலுள், கலங்கிய . . . .
துன்புற்றார்த் துயர் செய்தல் தக்கதோ, நினக்கு?
மாலை நீ,
கலந்தவர் காமத்தைக் கனற்றலோ செய்தாய்மன்;
நலம் கொண்டு நல்காதார் நனி நீத்த புலம்பின்கண்
அலந்தவர்க்கு அணங்கு ஆதல் தக்கதோ, நினக்கு? . . . .
மாலை நீ,
எம் கேள்வற் தருதலும் தருகல்லாய்; துணை அல்லை;
பிரிந்தவர்க்கு நோய் ஆகி, புணர்ந்தவர்க்குப் புணை ஆகி,
திருந்தாத செயின் அல்லால் இல்லையோ, நினக்கு?
என ஆங்கு . . . .
ஆய் இழை மடவரல் அவலம் அகல,
பாய் இருட் பரப்பினைப் பகல் களைந்தது போல,
போய் அவர் மண் வௌவி வந்தனர்
சேய் உறை காதலர் செய் வினை முடித்தே.
நெய்தற் கலி