நூல்கள்›கலித்தொகை›பாடல் 1872

பாடல் 1872

'அகல் ஆங்கண், இருள் நீங்கி, அணி நிலாத் திகழ்ந்த பின்,

பகல் ஆங்கண் பையென்ற மதியம் போல், நகல் இன்று

நல் நுதல் நீத்த திலகத்தள், "மின்னி

மணி பொரு பசும் பொன்கொல்? மா ஈன்ற தளிரின்மேல்

கணிகாரம் கொட்கும்கொல்?" என்றாங்கு அணி செல . . . .

மேனி மறைத்த பசலையள், ஆனாது

நெஞ்சம் வெறியா நினையா, நிலன் நோக்கா,

அஞ்சா, அழாஅ, அரற்றா, இஃது ஒத்தி

என் செய்தாள்கொல்?' என்பீர்! கேட்டீமின் பொன் செய்தேன்

மறையின் தன் யாழ் கேட்ட மானை அருளாது, . . . .

அறை கொன்று, மற்று அதன் ஆர் உயிர் எஞ்ச,

பறை அறைந்தாங்கு, ஒருவன் நீத்தான் அவனை

அறை நவ நாட்டில் நீர் கொண்டு தரின், யானும்

நிறை உடையேன் ஆகுவேன்மன்ற மறையின் என்

மென் தோள் நெகிழ்த்தானை மேஎய், அவன் ஆங்கண் . . . .

சென்று, சேட்பட்டது, என் நெஞ்சு;

'ஒன்றி முயங்கும்' என்று, என் பின் வருதிர்; மற்று ஆங்கே,

'உயங்கினாள்' என்று, ஆங்கு உசாதிர்; 'மற்று அந்தோ

மயங்கினாள்!' என்று மருடிர்; கலங்கன்மின்

இன் உயிர் அன்னார்க்கு எனைத்து ஒன்றும் தீது இன்மை . . . .

என் உயிர் காட்டாதோ மற்று;

'பழி தபு ஞாயிறே! பாடு அறியாதார்கண்

கழியக் கதழ்வை' எனக் கேட்டு, நின்னை

வழிபட்டு இரக்குவேன் வந்தேன் என் நெஞ்சம்

அழியத் துறந்தானைச் சீறுங்கால், என்னை . . . .

ஒழிய விடாதீமோ என்று;

அழிதக மாஅந் தளிர் கொண்ட போழ்தினான், இவ் ஊரார்

தாஅம் தளிர் சூடித் தம் நலம் பாடுப;

வாஅம் தளிர்க்கும் இடைச் சென்றார் மீள்தரின்,

யாஅம் தளிர்க்குவேம்மன்; . . . .

நெய்தல் நெறிக்கவும் வல்லன்; நெடு மென் தோள்

பெய் கரும்பு ஈர்க்கவும் வல்லன்; இள முலைமேல்

தொய்யில் எழுதவும் வல்லன்; தன் கையில்

சிலை வல்லான் போலும் செறிவினான்; நல்ல

பல வல்லன் தோள் ஆள்பவன்; . . . .

நினையும் என் உள்ளம்போல், நெடுங் கழி மலர் கூம்ப;

இனையும் என் நெஞ்சம்போல், இனம் காப்பார் குழல் தோன்ற;

சாய என் கிளவிபோல், செவ்வழி யாழ் இசை நிற்ப;

போய என் ஒளியேபோல், ஒரு நிலையே பகல் மாய;

காலன்போல் வந்த கலக்கத்தோடு என்தலை . . . .

மாலையும் வந்தன்று, இனி;

இருளொடு யான் ஈங்கு உழப்ப, என் இன்றிப் பட்டாய்;

அருள் இலை; வாழி! சுடர்!

ஈண்டு நீர் ஞாலத்துள் எம் கேள்வர் இல்லாயின்,

மாண்ட மனம் பெற்றார் மாசு இல் துறக்கத்து . . . .

வேண்டிய வேண்டியாங்கு எய்துதல் வாயெனின்,

யாண்டும், உடையேன் இசை,

ஊர் அலர் தூற்றும்; இவ் உய்யா விழுமத்துப்

பீர் அலர் போலப் பெரிய பசந்தன

நீர் அலர் நீலம் என, அவர்க்கு, அஞ்ஞான்று, . . . .

பேர் அஞர் செய்த என் கண்

தன் உயிர் போலத் தழீஇ, உலகத்து

மன் உயிர் காக்கும் இம் மன்னனும் என் கொலோ

இன் உயிர் அன்னானைக் காட்டி, எனைத்து ஒன்றும்

என் உயிர் காவாதது; . . . .

என ஆங்கு,

மன்னிய நோயொடு மருள் கொண்ட மனத்தவள்

பல் மலை இறந்தவன் பணிந்து வந்து அடி சேர,

தென்னவன் தெளித்த தேஎம் போல,

இன் நகை எய்தினள், இழந்த தன் நலனே. . . . .

நெய்தற் கலி

← பாடல் 1871பாடல் 1873 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்