நூல்கள்›கலித்தொகை›பாடல் 1808

பாடல் 1808

புள் இமிழ் அகல் வயல் ஒலி செந்நெல் இடைப் பூத்த

முள் அரைத் தாமரை முழு முதல் சாய்த்து, அதன்

வள் இதழ் உற நீடி, வயங்கிய ஒரு கதிர்,

அவை புகழ் அரங்கின்மேல் ஆடுவாள் அணி நுதல்

வகை பெறச் செரீஇய வயந்தகம் போல், தோன்றும் . . . .

தகை பெறு கழனி அம் தண் துறை ஊர! கேள்:

அணியொடு வந்து ஈங்கு எம் புதல்வனைக் கொள்ளாதி;

மணி புரை செவ் வாய் நின் மார்பு அகலம் நனைப்பதால்;

'தோய்ந்தாரை அறிகுவேன், யான்' என, கமழும் நின்

சாந்தினால் குறி கொண்டாள் சாய்குவள் அல்லளோ; . . . .

புல்லல் எம் புதல்வனை; புகல் அகல் நின் மார்பில்

பல் காழ் முத்து அணி ஆரம் பற்றினன் பரிவானான்;

மாண் இழை மட நல்லார் முயக்கத்தை நின் மார்பில்

பூணினால் குறி கொண்டாள் புலக்குவள் அல்லளோ;

கண்டே எம் புதல்வனைக் கொள்ளாதி; நின் சென்னி . . . .

வண்டு இமிர் வகை இணர் வாங்கினன் பரிவானால்;

'நண்ணியார்க் காட்டுவது இது' என, கமழும் நின்

கண்ணியால் குறி கொண்டாள் காய்குவள் அல்லளோ;

என ஆங்கு

பூங் கண் புதல்வனைப் பொய் பல பாராட்டி, . . . .

நீங்காய் இகவாய் நெடுங் கடை நில்லாதி;

ஆங்கே அவர் வயின் சென்றீ அணி சிதைப்பான்

ஈங்கு எம் புதல்வனைத் தந்து.

மருதக் கலி

← பாடல் 1807பாடல் 1809 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்