நூல்கள்›கலித்தொகை›பாடல் 1807

பாடல் 1807

பன் மலர்ப் பழனத்த பாசடைத் தாமரை

இன் மலர் இமிர்பு ஊதும் துணை புணர் இருந் தும்பி,

உண்துறை உடைந்த பூப் புனல் சாய்ப்ப, புலந்து, ஊடி

பண்புடை நல் நாட்டுப் பகை தலை வந்தென,

அது கைவிட்டு அகன்று ஒரீஇ, காக்கிற்பான் குடை நீழற் . . . .

பதி படர்ந்து, இறைகொள்ளும் குடி போல பிறிதும் ஒரு

பொய்கை தேர்ந்து அலமரும் பொழுதினான், மொய் தப

இறை பகை தணிப்ப அக் குடி பதிப் பெயர்ந்தாங்கு,

நிறை புனல் நீங்க வந்து, அத் தும்பி அம் மலர்ப்

பறை தவிர்பு அசைவிடூஉம் பாய் புனல் நல் ஊர! . . . .

'நீங்குங்கால் நிறம் சாய்ந்து, புணருங்கால் புகழ் பூத்து,

நாம் கொண்ட குறிப்பு, இவள் நலம்' என்னும் தகையோதான்

எரி இதழ் சோர்ந்து உக ஏதிலார்ப் புணர்ந்தமை

கரி கூறும் கண்ணியை, ஈங்கு எம் இல் வருவதை;

'சுடர் நோக்கி மலர்ந்து, ஆங்கே படின் கூம்பும் மலர் போல், என் . . . .

தொடர் நீப்பின், தொகும், இவள் நலம்' என்னும் தகையோதான்

அலர் நாணிக் கரந்த நோய் கைம்மிக, பிறர் கூந்தல்

மலர் நாறும் மார்பினை, ஈங்கு எம் இல் வருவதை;

'பெயின் நந்தி, வறப்பின் சாம், புலத்திற்குப் பெயல் போல், யான்

செலின் நந்தி, செறின் சாம்பும், இவள்' என்னும் தகையோதான் . . . .

மூடி உற்ற கோதை போல் யாம் வாட, ஏதிலார்

தொடி உற்ற வடுக் காட்டி, ஈங்கு எம் இல் வருவதை;

ஆங்க,

ஐய அமைந்தன்று; அனைத்தாகப் புக்கீமோ,

வெய்யாரும் வீழ்வாரும் வேறாக; கையின் . . . .

முகை மலர்ந்தன்ன முயக்கில் தகை இன்றே,

தண் பனி வைகல் எமக்கு.

மருதக் கலி

← பாடல் 1806பாடல் 1808 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்