நூல்கள்›கலித்தொகை›பாடல் 1782

பாடல் 1782

வறன் உறல் அறியாத வழை அமை நறுஞ் சாரல்

விறல் மலை வியல் அறை, வீழ் பிடி உழையதா,

மறம் மிகு வேழம், தன் மாறுகொள் மைந்தினான்,

புகர் நுதல் புண் செய்த புய் கோடு போல,

உயர் முகை நறுங் காந்தள் நாள்தோறும் புதிது ஈன, . . . .

அயம் நந்தி அணிபெற, அருவி ஆர்த்து இழிதரும்

பய மழை தலைஇய பாடு சால் விறல் வெற்ப!

மறையினின் மணந்து, ஆங்கே மருவு அறத் துறந்தபின்,

இறை வளை நெகிழ்பு ஓட, ஏற்பவும் ஒல்லும்மன்

அயல் அலர் தூற்றலின், ஆய் நலன் இழந்த, கண்; . . . .

கயல் உமிழ் நீர் போல, கண் பனி கலுழாக்கால்;

இனிய செய்து அகன்று, நீ இன்னாதாத் துறத்தலின்,

'பனி இவள் படர்' என பரவாமை ஒல்லும்மன்

ஊர் அலர் தூற்றலின், ஒளி ஓடி, நறு நுதல்

பீர் அலர் அணி கொண்டு, பிறை வனப்பு இழவாக்கால்; . . . .

'அஞ்சல்' என்று அகன்று, நீ அருளாது துறத்தலின்,

நெஞ்சு அழி துயர் அட, நிறுப்பவும் இயையும்மன்

நனவினால் நலம் வாட, நலிதந்த நடுங்கு அஞர்

கனவினால் அழிவுற்று, கங்குலும் அரற்றாக்கால்;

என ஆங்கு, . . . .

விளியா நோய் உழந்து ஆனா என் தோழி, நின் மலை

முளிவுற வருந்திய முளை முதிர் சிறு தினை

தளி பெறத் தகைபெற்றாங்கு, நின்

அளி பெற நந்தும், இவள் ஆய் நுதற் கவினே

குறிஞ்சிக் கலி

← பாடல் 1781பாடல் 1783 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்