பாடல் 1781
முறம் செவி மறைப் பாய்பு முரண் செய்த புலி செற்று,
மறம் தலைக்கொண்ட நூற்றுவர் தலைவனைக்
குறங்கு அறுத்திடுவான் போல், கூர் நுதி மடுத்து, அதன்
நிறம் சாடி முரண் தீர்ந்த நீள் மருப்பு எழில் யானை,
மல்லரை மறம் சாய்த்த மால் போல், தன் கிளை நாப்பண், . . . .
கல் உயர் நனஞ் சாரல், கலந்து இயலும் நாட! கேள்:
தாமரைக் கண்ணியை, தண் நறுஞ் சாந்தினை,
நேர் இதழ்க் கோதையாள் செய்குறி நீ வரின்,
'மணம் கமழ் நாற்றத்த மலை நின்று பலி பெறூஉம்
அணங்கு' என அஞ்சுவர், சிறுகுடியோரே; . . . .
ஈர்ந் தண் ஆடையை, எல்லி மாலையை,
சோர்ந்து வீழ் கதுப்பினாள் செய்குறி நீவரின்,
ஒளி திகழ் ஞெகிழியர், கவணையர், வில்லர்,
'களிறு' என ஆர்ப்பவர், ஏனல் காவலரே
ஆர மார்பினை, அண்ணலை, அளியை, . . . .
ஐது அகல் அல்குலாள் செய்குறி நீ வரின்,
'கறி வளர் சிலம்பில் வழங்கல் ஆனாப்
புலி' என்று ஓர்க்கும், இக் கலி கேழ் ஊரே
என ஆங்கு
விலங்கு ஓரார், மெய் ஓர்ப்பின், இவள் வாழாள்; இவள் அன்றி, . . . .
புலம் புகழ் ஒருவ! யானும் வாழேன்;
அதனால், பொதி அவிழ் வைகறை வந்து, நீ குறை கூறி,
வதுவை அயர்தல் வேண்டுவல், ஆங்கு,
புதுவை போலும் நின் வரவும், இவள்
வதுவை நாண் ஒடுக்கமும், காண்குவல், யானே. . . . .
குறிஞ்சிக் கலி