பாடல் 1856
தெரி இணர் ஞாழலும், தேம் கமழ் புன்னையும்,
புரி அவிழ் பூவின கைதையும், செருந்தியும்,
வரி ஞிமிறு இமிர்ந்து ஆர்ப்ப, இருந் தும்பி இயைபு ஊத
செரு மிகு நேமியான் தார் போல, பெருங் கடல்
வரி மணல்வாய் சூழும் வயங்கு நீர்த் தண் சேர்ப்ப! . . . .
கொடுங் கழி வளைஇய குன்று போல், வால் எக்கர்,
நடுங்கு நோய் தீர, நின் குறி வாய்த்தாள் என்பதோ
கடும் பனி அறல் இகு கயல் ஏர் கண் பனி மல்க,
இடும்பையோடு இனைபு ஏங்க, இவளை நீ துறந்ததை;
குறி இன்றிப் பல் நாள், நின் கடுந் திண் தேர் வரு பதம் கண்டு, . . . .
எறி திரை இமிழ் கானல், எதிர்கொண்டாள் என்பதோ
அறிவு அஞர் உழந்து ஏங்கி, ஆய் நலம் வறிதாக,
செறி வளை தோள் ஊர, இவளை நீ துறந்ததை;
காண் வர இயன்ற இக் கவின் பெறு பனித் துறை,
யாமத்து வந்து, நின் குறி வாய்த்தாள் என்பதோ . . . .
வேய் நலம் இழந்த தோள் விளங்குஇழை பொறை ஆற்றாள்,
வாள் நுதல் பசப்பு ஊர, இவளை நீ துறந்ததை;
அதனால்,
இறை வளை நெகிழ்ந்த எவ்வ நோய் இவள் தீர,
'உரவுக் கதிர் தெறும்' என ஓங்கு திரை விரைபு, தன் . . . .
கரை அமல் அடும்பு அளித்தாஅங்கு
உரவு நீர்ச் சேர்ப்ப! அருளினை அளியே.
நெய்தற் கலி