நூல்கள்›கலித்தொகை›பாடல் 1778

பாடல் 1778

கொடுவரி தாக்கி வென்ற வருத்தமொடு

நெடு வரை மருங்கின் துஞ்சும் யானை,

நனவில் தான் செய்தது மனத்தது ஆகலின்,

கனவில் கண்டு, கதுமென வெரீஇ,

புதுவதாக மலர்ந்த வேங்கையை . . . .

'அது' என உணர்ந்து, அதன் அணி நலம் முருக்கி,

பேணா முன்பின் தன் சினம் தணிந்து, அம் மரம்

காணும் பொழுதின் நோக்கல் செல்லாது,

நாணி இறைஞ்சும் நல் மலை நல் நாட!

போது எழில் மலர் உண்கண் இவள்மாட்டு நீ இன்ன . . . .

காதலை என்பதோ இனிது மற்று இன்னாதே,

மின் ஓரும் கண் ஆக, இடி என்னாய், பெயல் என்னாய்,

இன்னது ஓர் ஆர் இடை, ஈங்கு நீ வருவதை;

இன்புற அளித்தனை இவள்மாட்டு நீ இன்ன

அன்பினை என்பதோ இனிது மற்று இன்னாதே, . . . .

மணம் கமழ் மார்பினை, மஞ்சு இவர் அடுக்கம் போழ்ந்து,

அணங்குடை ஆர் இடை, ஈங்கு நீ வருவதை;

இருள் உறழ் இருங் கூந்தல் இவள்மாட்டு நீ இன்ன

அருளினை என்பதோ இனிது மற்று இன்னாதே,

ஒளிறு வேல் வலன் ஏந்தி, 'ஒருவன் யான்' என்னாது, . . . .

களிறு இயங்கு ஆர் இடை, ஈங்கு நீ வருவதை

அதனால்

இரவின் வாரல், ஐய! விரவு வீ

அகல் அறை வரிக்கும் சாரல்,

பகலும் பெறுவை, இவள் தட மென் தோளே. . . . .

குறிஞ்சிக் கலி

← பாடல் 1777பாடல் 1779 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்