நூல்கள்›கலித்தொகை›பாடல் 1755

பாடல் 1755

'ஒரு குழை ஒருவன் போல், இணர் சேர்ந்த மராஅமும்,

பருதி அம் செல்வன் போல், நனை ஊழ்த்த செருந்தியும்,

மீன் ஏற்றுக் கொடியோன் போல், மிஞிறு ஆர்க்கும் காஞ்சியும்,

ஏனோன் போல், நிறம் கிளர்பு கஞலிய ஞாழலும்,

ஆன் ஏற்றுக் கொடியோன் போல், எதிரிய இலவமும், ஆங்கு, . . . .

தீது தீர் சிறப்பின் ஐவர்கள் நிலை போல,

போது அவிழ் மரத்தொடு பொருகரை கவின் பெற,

நோ தக வந்தன்றால், இளவேனில் மேதக

பல் வரி இன வண்டு புதிது உண்ணும் பருவத்து,

தொல் கவின் தொலைந்த வென் தட மென் தோள் உள்ளுவார் . . . .

ஒல்குபு நிழல் சேர்ந்தார்க்கு உலையாது காத்து ஓம்பி,

வெல் புகழ் உலகு ஏத்த, விருந்து நாட்டு உறைபவர்

திசை திசை தேன் ஆர்க்கும் திருமருதமுன்துறை,

வசை தீர்ந்த என் நலம் வாடுவது அருளுவார்

நசை கொண்டு தம் நீழல் சேர்ந்தாரைத் தாங்கி, தம் . . . .

இசை பரந்து, உலகு ஏத்த, ஏதில் நாட்டு உறைபவர்;

அறல் சாஅய் பொழுதோடு, எம் அணி நுதல் வேறாகி,

திறல் சான்ற பெரு வனப்பு இழப்பதை அருளுவார்

ஊறு அஞ்சி நிழல் சேர்ந்தார்க்கு உலையாது காத்து ஓம்பி,

ஆறு இன்றிப் பொருள் வெஃகி, அகன்ற நாட்டு உறைபவர்' . . . .

என, நீ

தெருமரல் வாழி, தோழி! நம் காதலர்,

பொரு முரண் யானையர் போர் மலைந்து எழுந்தவர்

செரு மேம்பட்ட வென்றியர்;

'வரும்' என வந்தன்று, அவர் வாய்மொழித் தூதே . . . .

பாலைக் கலி

← பாடல் 1754பாடல் 1756 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்