பாடல் 1804
'நீர் ஆர் செறுவில் நெய்தலொடு நீடிய
நேர் இதழ் ஆம்பல் நிரை இதழ் கொண்மார்,
சீர் ஆர் சேயிழை ஒலிப்ப, ஓடும்
ஓரை மகளிர் ஓதை வெரீஇ எழுந்து,
ஆரல் ஆர்கை அம் சிறைத் தொழுதி . . . .
உயர்ந்த பொங்கர் உயர் மரம் ஏறி,
அமர்க் கண் மகளிர் அலப்பிய அந் நோய்
தமர்க்கு உரைப்பன போல், பல் குரல் பயிற்றும்
உயர்ந்த போரின் ஒலி நல் ஊரன்
புதுவோர்ப் புணர்தல் வெய்யன்ஆயின், . . . .
வதுவை நாளால் வைகலும், அஃது யான்
நோவேன், தோழி! நோவாய், நீ' என
எற் பார்த்து உறுவோய்! கேள், இனித் தெற்றென:
'எல்லினை வருதி; எவன் குறித்தனை?' எனச்
சொல்லாதிருப்பேனாயின், ஒல்லென, . . . .
விரிஉளைக் கலி மான் தேரொடு வந்த
விருந்து எதிர்கோடலின், மறப்பல், என்றும்;
'வாடிய பூவொடு வாரல், எம் மனை?' என
ஊடியிருப்பேனாயின், நீடாது,
அச்சு ஆறாக உணரிய வருபவன் . . . .
பொய்ச் சூள் அஞ்சிப் புலவேன் ஆகுவல்
'பகல் ஆண்டு அல்கினை, பரத்த!' என்று யான்
இகலியிருப்பேனாயின், தான் தன்
முதல்வன் பெரும் பெயர் முறையுளிப் பெற்ற
புதல்வற் புல்லிப் பொய்த் துயில் துஞ்சும் . . . .
ஆங்க
விருந்து எதிர் கொள்ளவும், பொய்ச் சூள் அஞ்சவும்,
அரும் பெறல் புதல்வனை முயங்கக் காணவும்,
ஆங்கு அவிந்து ஒழியும், என் புலவி தாங்காது,
அவ்அவ் இடத்தான் அவைஅவை காண . . . .
பூங் கண் மகளிர் புனை நலம் சிதைக்கும்
மாய மகிழ்நன் பரத்தைமை
நோவேன், தோழி! கடன் நமக்கு எனவே.
மருதக் கலி