நூல்கள்›கலித்தொகை›பாடல் 1761

பாடல் 1761

எஃகு இடை தொட்ட, கார்க் கவின் பெற்ற ஐம்பால் போல்

மை அற விளங்கிய, துவர் மணல் அது; அது

ஐதாக நெறித்தன்ன அறல் அவிர் நீள் ஐம்பால்

அணி நகை இடையிட்ட ஈகை அம் கண்ணி போல்,

பிணி நெகிழ் அலர் வேங்கை விரிந்த பூ நெறி கொள . . . .

துணி நீரால், தூ மதி நாளால், அணி பெற

ஈன்றவள் திதலை போல் ஈர் பெய்யும் தளிரொடும்,

ஆன்றவர் அடக்கம் போல் அலர்ச் செல்லாச் சினையொடும்,

வல்லவர் யாழ் போல வண்டு ஆர்க்கும் புதலொடும்,

நல்லவர் நுடக்கம் போல் நயம் வந்த கொம்பொடும், . . . .

உணர்ந்தவர் ஈகை போல் இணர் ஊழ்த்த மரத்தொடும்,

புணர்ந்தவர் முயக்கம் போல் புரிவுற்ற கொடியொடும்

நயந்தார்க்கோ நல்லைமன், இளவேனில் எம் போல;

பசந்தவர் பைதல் நோய் பகை எனத் தணித்து, நம்

இன் உயிர் செய்யும் மருந்தாகி, பின்னிய . . . .

காதலர் எயிறு ஏய்க்கும் தண் அருவி நறு முல்லைப்

போது ஆரக் கொள்ளும் கமழ் குரற்கு என்னும்

தூது வந்தன்றே தோழி!

துயர் அறு கிளவியோடு அயர்ந்தீகம் விருந்தே.

பாலைக் கலி

← பாடல் 1760பாடல் 1762 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்