நூல்கள்›கலித்தொகை›பாடல் 1744

பாடல் 1744

அரி மான் இடித்தன்ன, அம் சிலை வல் வில்

புரி நாண், புடையின், புறம் காண்டல் அல்லால்

இணைப் படைத் தானை அரசோடு உறினும்

கணைத் தொடை நாணும் கடுந் துடி ஆர்ப்பின்,

எருத்து வலிய எறுழ் நோக்கு இரலை . . . .

மருப்பின் திரிந்து மறிந்து வீழ் தாடி,

உருத்த கடுஞ் சினத்து, ஓடா மறவர்,

பொருள் கொண்டு புண் செயின் அல்லதை, அன்போடு

அருள் புறம் மாறிய ஆர் இடை அத்தம்

புரிபு நீ புறம் மாறி, போக்கு எண்ணி, புதிது ஈண்டிப் . . . .

பெருகிய செல்வத்தான் பெயர்த்தரல் ஒல்வதோ

செயலை அம் தளிர் ஏய்க்கும் எழில் நலம்; அந் நலம்

பயலையால் உணப்பட்டுப் பண்டை நீர் ஒழிந்தக்கால்;

பொய் அற்ற கேள்வியால், புரையோரைப் படர்ந்து, நீ

மை அற்ற படிவத்தான் மறுத்தரல் ஒல்வதோ . . . .

தீம் கதிர் மதி ஏய்க்கும் திருமுகம்; அம் முகம்,

பாம்பு சேர் மதி போல, பசப்பு ஊர்ந்து தொலைந்தக்கால்;

பின்னிய தொடர் நீவி, பிறர் நாட்டுப் படர்ந்து, நீ

மன்னிய புணர்ச்சியான் மறுத்தரல் ஒல்வதோ

புரி அவிழ் நறு நீலம் புரை உண் கண் கலுழ்பு ஆனா, . . . .

திரி உமிழ் நெய்யே போல், தெண் பனி உறைக்குங்கால்;

என ஆங்கு,

அனையவை போற்றி, நினைஇயன நாடிக் காண்;

வளமையோ வைகலும் செயலாகும்; மற்று இவள்

முளை நிரை முறுவலார் ஆயத்துள் எடுத்து ஆய்ந்த . . . .

இளமையும் தருவதோ, இறந்த பின்னே.

பாலைக் கலி

← பாடல் 1743பாடல் 1745 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்